கேரள மாநிலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அங்கு மழை பெய்து வருகிறது.
பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்தது. இதனால் கண்ணூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மலைப்பாங்கான பகுதிகளில் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
அவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். ஒரு வாரத்திற்கும் மேலாக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரள மாநிலத்தில் மழை இல்லை. இதனால், வெள்ளம் பாதித்த பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கின. நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
இதனால் கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று முதல் 21ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று மட்டும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மீனவர்களும் இன்று முதல் 21-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.