தங்கம் விலை தொடர் சரிவு…. ஒரு பவுன் ரூ.42,320-க்கு விற்பனை
சென்னை: ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், நேற்று ரூ.528 குறைந்து, பவுன் ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் மே 5-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.46,200 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
அன்று முதல் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வந்தது. இதனிடையே கடந்த செப்டம்பர் 25-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. நேற்று பவுன் ரூ.528 குறைந்து ரூ.42,320 ஆக இருந்தது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.66 குறைந்து ரூ.5,290-க்கு விற்பனை செய்யப்பட்டது.
24 காரட் தூய தங்கம் ஒரு பவுன் ரூ.46,080-க்கும் விற்பனையானது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.73.50 ஆக இருந்தது. வெள்ளி கிலோ பார் ஒன்றுக்கு ரூ.2,000 குறைந்து ரூ.73,500 ஆக இருந்தது. இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது:-
அமெரிக்கா தற்போது பெரும் பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது. நாட்டின் பெடரல் ரிசர்வ் வங்கி பல நாட்களாக வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 2 ஆயிரம் டாலரில் இருந்து 1,815 டாலராக குறைந்துள்ளது.
இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கடந்த 7 மாதங்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.42,000 வரை விற்பனையானது. இதன் பிறகு படிப்படியாக தங்கம் விலை அதிகரித்து ரூ.46 ஆயிரத்தை எட்டியது.
தற்போது தங்கம் பழைய விலைக்கு வந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம். ஏனெனில் புரட்டாசி மாதம் முடிந்ததும் சிறப்புகள் அதிகரிக்கும். அப்போது தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.