பாலியல் கொடுமை நிரூபிக்கப்பட்டால் நான் தூக்கில் ஏற தயார்-இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர்
புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இரண்டிலும் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீதும், அதன் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வினேஷ் போகத் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சரிதா மோர், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா உள்ளிட்ட 30 மல்யுத்த வீரர்கள் இதற்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத் பல ஆண்டுகளாக தேசிய பயிற்சியாளர்களால் பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்தார்.மேலும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்திய வினேஷ் போகட், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அதிகாரிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். “இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரால் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து குறைந்தது 10-12 பெண் மல்யுத்த வீரர்கள் என்னிடம் கூறியுள்ளனர். அவர்களின் பெயர்களை என்னால் இப்போது கூற முடியாது.
ஆனால் நம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க வேண்டும் என்றால், நான் செய்வேன். ‘ என்றார் வினேஷ் போகத் பின்னர் பேசிய பஜ்ரங் புனியா, “எங்கள் போராட்டம் அரசுக்கோ அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்திற்கோ எதிரானது அல்ல. இது இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிரானது. அவரை கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரிஜ்பூஷன் சரண் சிங், வீரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல, விதிமுறைகள் வகுக்கும்போதெல்லாம் இதுபோன்ற பிரச்சினைகள் எழுகின்றன. என் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு நிரூபிக்கப்பட்டாலும் நான் தூக்கில் ஏற தயாராக இருக்கிறேன். கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நான் விலகமாட்டேன். ஆனால் சிபிஐ அல்லது போலீஸ் விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று பிரிஜ்பூஷன் சரண் சிங் கூறினார்.