தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தி 3வது டி20ல் வென்று தொடரை சமன் செய்தது இந்தியா
ஜோகன்னஸ்பர்க்: சூர்ய குமாரின் அதிரடி சதத்தால் 3வது டி20ல் தென் ஆப்ரிக்காவை 106 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
முதல் போட்டி மழையால் ரத்தாகி, 2வது டி20ல் தென் ஆப்ரிக்கா வென்றது. 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் சுப்மன் கில் (8), திலக் வர்மா (0) அடுத்தடுத்து விக்கெட் இழந்த போதிலும் ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் அதிரடியில் அசத்தினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்தது. ஜெய்ஸ்வால் 41 பந்தில் 60 ரன் விளாசி ஆட்டமிழந்தார். சிக்சர் மழை பொழிந்த சூர்ய குமார் 55 பந்தில் சதம் அடித்தார்.
இவர் 56 பந்தில் 100 ரன் (8 சிக்சர், 7 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா குல்தீப் சுழலில் சிக்கி 13.5 ஓவரில் 95 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி சுருண்டது. அதிகபட்சமாக மில்லர் 35 ரன் எடுத்தார். குல்தீப் யாதவ் 2.5 ஓவர் மட்டுமே வீசி 17 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி 1-1 என தொடரை சமன் செய்தது.