ரேஷன் கடைகளில் அதிக விலைக்கு கனேடிய மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்வது ஏன்? தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
![](https://vivegamnews.com/wp-content/uploads/2024/06/16-1-13.png)
சென்னை: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் மசூர் பருப்பை ரேஷன் கடைகளுக்கு வழங்காமல், அதிக விலைக்கு கனேடிய மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்வது ஏன் என்பது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவப்பு நிற மசூர் பருப்பை மாநிலங்கள் குறைந்த விலையில் பெற்று, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கலாம் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உணவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், பொது விநியோகத் திட்டத்துக்கான இ-டெண்டரில் தமிழக அரசு மசூர் பருப்பை சேர்க்கவில்லை எனக் கூறி பருப்பு மொத்த விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், மசூர் பருப்பு போன்று கேசரி பருப்பும் உள்ளதால், மசூர் பருப்பில் கலப்படம் நடக்க வாய்ப்புள்ளதாக, தமிழக அரசு, 2007-ல், மசூர் பருப்பு கொள்முதல் அறிவிப்பை திரும்பப் பெற்றது.
பின்னர் மீண்டும் மசூர் பருப்பின் சத்துக்களை கருத்தில் கொண்டு, கடந்த 2017-ம் ஆண்டு முதல் கொள்முதல் பட்டியலில் மசூர் பருப்பு சேர்க்கப்பட்டது. ஆனால் பிப்ரவரி 14-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட இ-டெண்டர் அறிவிப்பில், மசூர் தால் மீண்டும் குறிப்பிடப்படவில்லை.
இதை எதிர்த்து எங்கள் நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து, எங்களின் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், எங்களின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துவிட்டது.
தமிழகத்தில் 1961-ம் ஆண்டு முதல் கேசரி பருப்புக்கு தடை செய்யப்பட்டதை தமிழக அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த மே 27-ம் தேதி 20,000 மெட்ரிக் டன் கனடிய மஞ்சள் பருப்பு கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியது.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஜூன் 13-ம் தேதி, கனடா மஞ்சள் பருப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு டெண்டர் வழங்கியது. மசூர் பருப்பை விட கனடிய மஞ்சள் பருப்பு விலை அதிகம். இதனால் ரேஷன் கடைகளில் பருப்பு வாங்கும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, ரேஷன் கடைகளில் முன்பு போல் மசூர் பருப்பு கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். அதில் கனேடிய மஞ்சள் பருப்பு கொள்முதல் செய்ய தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், ”கூடுதல் சத்து நிறைந்த மசூர் பருப்பை தமிழக அரசு கொள்முதல் செய்ய மறுத்துள்ளது.
அதற்கான காரணத்தை தமிழக அரசு தெரிவிக்கவில்லை. இந்தியாவில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் மசூர் பருப்பு விளைகிறது வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பி.எஸ்.ராமன், ”மசூர் பருப்பை விட, துவரம் பருப்பை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதனால்தான் துவரம் பருப்பு, பொது விநியோகத் திட்டத்திற்காக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
எனவே மசூர் பருப்பு டெண்டரில் சேர்க்கப்படவில்லை, அதேசமயம் மசூர் பருப்புக்கு தடை விதிக்கப்படவில்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மசூர் பருப்பும் கொள்முதல் செய்யப்படும்,” என்றார்.
இதையடுத்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் மசூர் பருப்புக்கு பதிலாக அதிக விலை கொண்ட கனேடிய மஞ்சள் பருப்பு எந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.