சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7-ம் தேதி ரோஹித் சர்மா அறிவித்தார். விராட் கோலிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவங்களுக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில், இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையையும், சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றது. 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் அறிவித்தார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் அறிவித்திருந்தார். இதற்கிடையில், ரோஹித் சர்மா எதிர்பாராத விதமாக கடந்த 7-ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடர் வரை ரோஹித் சர்மா கேப்டனாக நீடிப்பார் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், அவரது ஓய்வு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
38 வயதான ரோஹித் சர்மா தற்போது 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாட இலக்கு வைத்துள்ளார். இந்த சூழலில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரோஹித் சர்மாவை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது எக்ஸ் இணையதளத்தில் ஒரு பதிவில் கூறியதாவது:- வர்ஷாவில் உள்ள எனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை வரவேற்று, சந்தித்து, உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது பயணத்தின் அடுத்த அத்தியாயத்தில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.