முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் தகுதிச் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், இந்தப் போட்டியை வென்ற பிறகு ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் கூறினார். “பந்து வீச்சுக்கான எங்கள் திட்டங்களில் நாங்கள் தெளிவாக இருந்தோம். வேகப்பந்து வீச்சாளர்கள் சூழ்நிலையை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். சுயாஷ் சர்மா சிறப்பாக பந்து வீசினார். அவரது லைன் மற்றும் லெந்த் சிறப்பாக உள்ளது.
ஸ்டம்ப்களை குறிவைப்பதே சுயாஷின் வேலை. ஒரு கேப்டனாக, நான் அவரை குழப்ப விரும்பவில்லை. அவருக்கு யோசனைகளை வழங்குவதே எனது வேலை. அவர் ரன்கள் கொடுத்தாலும் பரவாயில்லை. அவரது கூகிள்ஸ் விளையாடுவது மிகவும் கடினம். நமது தொடக்க வீரர் பிலிப் சால்ட் டக்-அவுட்டில் இருந்து விளையாடுவதைப் பார்ப்பது கண்களுக்கு விருந்து. அவர் அணிக்கு ஒரு சிறந்த தொடக்கத்தை அளிக்கிறார். ஆர்சிபி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமல்ல, நாங்கள் எங்கு விளையாடச் சென்றாலும் ரசிகர்களும் ஆதரவாளர்களும் அதை எங்கள் சொந்த மைதானம் போல உணர வைத்துள்ளனர்.

நாங்கள் உங்களை நேசிக்கிறோம். உங்கள் தொடர்ச்சியான ஆதரவு எங்களுக்குத் தேவை. இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே உள்ளது; ஒன்றாகக் கொண்டாடுவோம்,” என்று கேப்டன் ரஜத் பட்டிதார் கூறினார். 2009, 2011 மற்றும் 2016 சீசன்களுக்குப் பிறகு நடப்பு சீசனில் நான்காவது முறையாக ஆர்சிபி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2011 சீசன் முதல் ஐபிஎல் பிளே-ஆஃப் வடிவத்தில் விளையாடப்படுகிறது. அந்த வகையில், முந்தைய 14 சீசன்களில், குவாலிஃபையர் 1 போட்டியில் வென்ற அணி 11 முறை பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.