புது டெல்லி: எல்லைப் பதற்றத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்களில் மே 14 வரை உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, பூஜ், பிகானர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மேர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், காண்ட்லா, காங்க்ரா (காகல்), கேஷோத், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லே, லூதியானா, லே, லூதியானா, பத்ரா, லூதியானா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சர்சவா, சிம்லா, ஸ்ரீநகர், தோயிஸ் மற்றும் உத்தரலை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கூடுதலாக, டெல்லி மற்றும் மும்பை வான்வெளியில் இயங்கும் வழித்தடங்கள் மே 15 ஆம் தேதி காலை 5:29 மணி வரை மூடப்படும். இந்தப் பகுதிகளில் அதிகரித்து வரும் எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த உத்தரவு வந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா சமீபத்தில் நடத்திய துல்லியமான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜம்மு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்திய பாதுகாப்புப் படைகள் ட்ரோன்களை வெற்றிகரமாக இடைமறித்து சுட்டு வீழ்த்தியிருந்தாலும், எல்லைப் பகுதிகளில் பதட்டங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவைகளை நிறுத்துவதாக முன்னதாக அறிவித்திருந்தன. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய நான்கு எல்லை மாநிலங்களில் 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தானால் ஏவப்பட்ட 400-க்கும் மேற்பட்ட துருக்கிய தயாரிப்பு ட்ரோன்களை வியாழக்கிழமை இரவு ‘சுதர்சன சக்கரம்’ (S-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களுடன் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
அதன் பிறகும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும் இந்தியாவின் பதிலடித் தாக்குதல்களும் தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை இரவு காஷ்மீரின் பாரமுல்லாவிலிருந்து குஜராத்தில் உள்ள பூஜ் வரை 26 இடங்களை பாகிஸ்தான் ட்ரோன்கள் குறிவைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோட்டா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், பூஜ், குவார்பேட் மற்றும் லக்கி நாலா ஆகிய இடங்களை பாகிஸ்தான் ட்ரோன்கள் குறிவைத்தன. அறிக்கைகளின்படி, இவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.