மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீதான மோசடி வழக்கில் மும்பை காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்து.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீதான ரூ.60 கோடி மோசடி வழக்கில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவரிடமிருந்து ரூ.60 கோடி மோசடி செய்ததாக இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புகார்தாரரின் அறிக்கையின்படி, தனது பணத்தை பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குநரகத்திடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிகளின்படி சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர உள்ளதாகவும் தீபக் கோத்தாரி தெரிவித்துள்ளார்.
பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் உள்ளனர். 2015-2023 காலகட்டத்தில் இந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரியை ரூ.60.48 கோடி முதலீடு செய்ய தூண்டியதாகவும், ஆனால் அந்தப் பணத்தை இருவரும் தங்களின் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.