டெல்லி: காஷ்மீரில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகளை மீட்க ஸ்ரீநகரில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் நகரில் உள்ள பைசரன் மலைப்பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகளை மீட்க ஸ்ரீநகரில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் மத்திய அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.