புதுடெல்லி: 2021-ல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் திரும்பப் பெற்ற பிறகு தாலிபான்கள் நாட்டைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, இந்தியா காபூலில் உள்ள தனது தூதரகத்தை மூடியது. ஒரு வருடம் கழித்து, வர்த்தகம், மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை எளிதாக்குவதற்காக இந்தியா ஒரு தொழில்நுட்ப அலுவலகத்தைத் திறந்தது.
இந்த சூழலில், தலிபான் அரசாங்கத்தின் சார்பாக அந்நாட்டின் மூத்த பிரதிநிதி ஒருவர் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். நேற்று புதுதில்லி வந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, தனது தூதுக்குழுவுடன் இன்று வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, ”சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது முதலில் உதவி செய்தது இந்தியாதான்.

ஆப்கானிஸ்தான் இந்தியாவை நெருங்கிய நண்பனாகப் பார்க்கிறது. பரஸ்பர மரியாதை, வர்த்தகம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் உறவுகளை நாங்கள் விரும்புகிறோம். இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளை வலுப்படுத்த ஒரு ஆலோசனை செயல்முறையை உருவாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். டெல்லியில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
எனது இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையேயான புரிதலை அதிகரிக்கும். இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் தங்கள் ஈடுபாட்டையும் பரிமாற்றங்களையும் அதிகரிக்க வேண்டும். மற்ற நாடுகளுக்கு எதிராக நமது பிரதேசத்தை எந்தக் குழுவும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.