புது டெல்லி: டெல்லியில் நிலவும் கோடை வெப்பத்தின் தாக்கத்தை மழை நீக்கியுள்ளது. இருப்பினும், மழை மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வரை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், பாலம் மற்றும் பிரகதி மைதானம் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 74+ கி.மீ. ஆக இருந்தது. இதேபோல், தலைநகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இந்த திடீர் மழை காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்த வகையில், லாஜ்பத் நகர், ஆர்.கே.புரம், துவாரகா உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி விமான நிலையம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்களும் இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளன. டெல்லியில் மட்டுமல்ல, சில வட மாநிலங்களிலும் மழை பெய்யும் என்று பதிவிடப்பட்டுள்ளது. மழை குறையும் வரை மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், ஜன்னல்களை மூடி வைக்கவும், பயணம் செய்வதைத் தவிர்க்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
பஞ்சாபின் வடக்குப் பகுதி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தானின் தென்மேற்குப் பகுதி, ஒடிசா, சத்தீஸ்கர், வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.