மும்பை: அனில் அம்பானியின் கடன் கணக்கை மோசடி என அறிவித்ததை திரும்பப்பெறுவதாக கனரா வங்கி மும்பை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம் கனரா வங்கியிடம் இருந்து ₹1,050 கோடி கடன் வாங்கியிருந்தது. அந்த கடன் தொகையை ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம் முறைகேடாக பயன்படுத்தியதாக கனரா வங்கி குற்றம் சாட்டியது. மேலும் இந்த விவகாரத்தில் அனில் அம்பானி தொடர்பான வங்கி கடன் கணக்கை ‘மோசடி’ என அறிவித்தது.
இதை எதிர்த்து அனில் அம்பானி தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் வங்கியின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது.
இந்நிலையில் அனில் அம்பானியின் கடன் கணக்கை மோசடி என அறிவித்ததை திரும்பப்பெறுவதாக கனரா வங்கி மும்பை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. இதை அடுத்து இந்த மனு மீதான விசாரணையை ஐகோர்ட் தள்ளிவைத்து உத்தரவிட்டது.