நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடந்த 9-ம் தேதி யங் இந்தியன் நிறுவனத்துக்கு ரூ.5,000 கோடி மதிப்பிலான சொத்துகளை மாற்றியதில் நிதி முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை விரைவில் நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இது அரசியல் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு நாளிதழ், காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் போல் செயல்பட்டு வருகிறது. இது காங்கிரஸ் கட்சியின் இன்னொரு ஊழல் மாதிரி. மாநிலங்களை ஆண்ட காங்கிரஸ் முதல்வர்கள் அந்த நாளிதழுக்கு நிறைய அரசு விளம்பரங்கள் கொடுத்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையாக இருந்ததில்லை.

தொழில்நுட்ப ரீதியாக, செய்தித்தாள் என்றால், அதை அச்சிட வேண்டும். ஆனால் சில செய்தித்தாள்கள் பெயருக்கு மட்டுமே உள்ளன. அவை அச்சிடப்படவில்லை.. விற்கப்படவில்லை… விநியோகிக்கப்படவில்லை. அவர்களை பார்க்க முடியாது. மிக முக்கியமாக, அவற்றைப் படிக்க முடியாது. நேஷனல் ஹெரால்டு நாளிதழும் அந்த வகைக்குள் வரக்கூடிய செய்தித்தாள். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில், அந்த மாநில முதல்வர்கள், நாளிதழுக்கு நிதி வழங்காமல், அரசு விளம்பரம் என்ற பெயரில், நேஷனல் ஹெரால்டு நாளிதழுக்கு, பல லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.
பல்வேறு பதிப்புகளைக் கொண்ட தினசரி செய்தித்தாள்களுக்கு ஒரு சில விளம்பரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நேஷனல் ஹெரால்டு என்ற வாரப் பத்திரிக்கைக்கு காங்கிரஸ் முதல்வர்களால் அரசு விளம்பரங்கள் அதிகம். காங்கிரஸின் ஊழலின் முன்மாதிரிகளில் இதுவும் ஒன்று. இமாச்சல பிரதேச மாநிலத்தில் கூட, குறைந்த விலையில் செய்தித்தாள்களுக்கு ஒரு சில விளம்பரங்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. ஆனால் நேஷனல் ஹெரால்டுக்கு நிறைய விளம்பரங்கள் கொடுக்கப்படுகிறது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் கையும் களவுமாக சிக்கியதால் காங்கிரஸ் கட்சியினர் பதற்றமடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் வரலாற்றைப் பார்த்தால், சுதந்திரம் அடைந்ததில் இருந்து, காங்கிரஸ் பல ஊழல்களில் ஈடுபட்டுள்ளது. அதில் இதுவும் ஒன்று. அவர் கூறினார்.