பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் இன்று இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்தடைந்தார். மும்பை விமான நிலையத்தில் அவரை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பல உயர் அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். இது இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் என்பதால், வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியுடன் நடைபெற்றது.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் ஸ்டார்மர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இரு நாடுகளுக்குமிடையே நீண்டகால நம்பிக்கையை உருவாக்கும் நோக்கில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனுடன், மும்பையில் நடைபெறும் உலகளாவிய நிதி மற்றும் தொழில்நுட்ப மாநாட்டில் மோடி, ஸ்டார்மர் ஆகியோர் இணைந்து பங்கேற்கின்றனர். இங்கு இருவரும் தனித்தனி உரைகளை நிகழ்த்தி, எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்தும், இருநாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது பற்றியும் முக்கிய கருத்துக்களை பகிர உள்ளனர்.
நாளை மும்பையில் நடைபெறும் தொழில்துறை தலைவர்களுடன் கூடிய கலந்துரையாடலில் இரு பிரதமர்களும் பங்கேற்கவுள்ளனர். இதன் மூலம், இந்தியா–இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும் என நம்பப்படுகிறது. இந்த விஜயம் இருநாட்டு உறவுகளிலும் புதிய பரிமாணத்தை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.