ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும், அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அவர், டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசியபோது, மக்கள் தொகை எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். தென் மாநிலங்களில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, உத்தரபிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில் இளையோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

சமீபகாலமாக, குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி, மக்கள் தொகை அதிகமாக இருந்தால் தான் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை இருக்கும் என வலியுறுத்தினார்.
அவர் மேலும், மக்கள் தொகை மேலாண்மை மற்றும் தொகுதி மறுவரையறை பிரச்சினைகளுக்கு மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்து, தீர்வு காணும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.