புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களின் ஊதியத்தை உயர்த்தும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை மகிழ்ச்சி அளிப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் பணவீக்கத்தை மனதில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் ஊதியத்தை திருத்தியமைக்க ஊரக வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் எம்.பி., சப்தகிரி சங்கர் உலகா தலைமையிலான குழு, “விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம் தற்போது நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீடு பணவீக்கத்தின் தாக்கத்தை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. எனவே, அடிமட்ட அளவில் உள்ள உண்மையான பொருளாதார நிலைமைகளை பிரதிபலிக்கும் வகையில், ஊதியக் கணக்கீட்டு முறையை முன்னுரிமை அடிப்படையில் மதிப்பாய்வு செய்து புதுப்பிக்க வேண்டும்.”

வேலை உறுதித் திட்டத்தில் மாநிலங்களுக்கு இடையே ஊதிய முரண்பாடு உள்ளதை சுட்டிக்காட்டிய நிலைக்குழு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஒரே மாதிரியான ஊதிய விகிதத்தை அமல்படுத்த அரசை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை மகிழ்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், 2025-26 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை பிரதிபலிக்கும் வகையில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். எனது கோரிக்கைக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போதைய தினக்கூலியானது நிலத்திலுள்ள உண்மையான பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நிதியமைச்சர் விழித்துக்கொண்டு ஏழை எளிய மக்களின் நிலையைப் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்.”