புது டெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு முன்பே நிறுவனங்கள் பல பொருட்களின் விலைகளை உயர்த்தியதால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தளத்தில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்த ஊடக அறிக்கையைப் பகிர்ந்து கொண்டார்.
அந்த அறிக்கையில், ‘2-ம் தேதி, மத்திய அரசு உணவுப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்தது. நுகர்வோர் இதனால் நேரடியாகப் பயனடைந்திருக்க வேண்டும். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது. பெரிய நிறுவனங்கள் வரி குறைப்பு பற்றி அறிந்தவுடன், அவர்கள் தங்கள் பொருட்களின் விலையை முன்கூட்டியே 10 சதவீதம் வரை அதிகரித்தனர்.

இதனால், ஜிஎஸ்டி வரி குறைப்பால் பொதுமக்கள் ஒரு சிறிய அளவிற்கு மட்டுமே பயனடைந்துள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது. இதை தனது X தளத்தில் பகிர்ந்து கொண்ட ஜெய்ராம் ரமேஷ், “சேமிப்பு விழா அல்ல, மோசடி விழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்குப் பதிலாக, பிரதமரின் விளம்பர பிரச்சாரம் நடத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளின் நன்மைகள் பொதுமக்களை நேரடியாகச் சென்றடையவில்லை என்றால், என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.