லோக்சபா தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 22-ம் தேதி சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு உறுப்பினர்கள் முழு ஆதரவை தெரிவித்தனர். அப்போது முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது:- லோக்சபா தொகுதி மறுவரையறை குறித்து, மாநிலங்களவையை கலந்தாலோசிக்காமல், மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா சட்டசபை தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கிறது.

மக்களவைத் தொகுதி மறுவரையறை குறித்து அனைத்துக் கட்சிகளும் மாநிலத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அதன் பிறகு பொது முடிவை எடுத்திருக்க வேண்டும். தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது. தெலுங்கானா சட்டசபை தொகுதிகளை, 119-ல் இருந்து, 153 ஆக உயர்த்த வேண்டும் என, சட்டசபை முடிவு செய்கிறது. இதற்கு, தேவையான அரசியல் சட்ட திருத்தங்களை, மத்திய அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்.
மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது. இப்படிச் செய்தால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த திட்டத்தை தெலுங்கானா சட்டசபை முற்றிலும் நிராகரிக்கிறது. இவ்வாறு முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார். இதையடுத்து மக்களவைத் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.