டெல்லி: டெல்லி-என்சிஆரில் உள்ள வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக டெல்லி-குருகிராம் எல்லையில், அப்பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், யமுனை நதியின் நீர்மட்டம் இன்று காலை அபாய அளவைத் தாண்டியது. இதன் காரணமாக, யமுனை நதிக்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
யமுனை உட்பட சில ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், யமுனைநகர் மாவட்டத்தில் உள்ள ஹட்னிகுண்ட் தடுப்பணையின் கதவுகளை அதிகாரிகள் திறக்கத் தொடங்கியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்படக்கூடிய சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழையால் டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் 7-8 கி.மீ. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குருகிராமில் பெய்த கனமழையால் மக்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்தனர். யமுனை நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பழைய ரயில் பாலத்தில் போக்குவரத்து இன்று மாலை 5 மணி முதல் நிறுத்தப்படும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ள அச்சுறுத்தலுக்கு மத்தியில், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று முதல்வர் ரேகா குப்தா வலியுறுத்தியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வயல்களில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஹட்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் நிலைமை மோசமடைந்துள்ளதாக மீட்புக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்று இரவு முதல் மக்களை மீட்டு வருகிறோம். மக்களை பாதுகாப்பாக மீட்டுள்ளோம். நேற்று இரவு முதல் 50-60 பேரை மீட்டுள்ளோம். சிக்கித் தவிக்கும் கால்நடைகளையும் மீட்டு வருகிறோம். டெல்லி அரசின் சார்பாக இந்தப் படகுகள் இயக்கப்படுகின்றன என்றார்.