பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா நடந்து வருகிறது. இந்த விழா வரும் 26-ம் தேதி நிறைவடைகிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரயாக்ராஜில் பக்தர்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரயாக்ராஜை சேர்ந்த தீபக் கோயல், வெளிநாடு மற்றும் நாட்டின் தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்காக புதிய சேவையை தொடங்கியுள்ளார். அதன்படி தீபக் கோயலின் வாட்ஸ் அப் எண்ணுக்கு பக்தர்கள் புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர்.
இந்த புகைப்படங்களை பிரிண்ட் அவுட் எடுக்கும் தீபக் கோயல், திரிவேணி சங்கமத்தில் உள்ள புனித நீரில் அவற்றை நீராடுகிறார். ஒரு புகைப்படத்திற்கு 1100 ரூபாய் வசூலிக்கிறார். சமூக வலைதளங்களில் பதிவிட்ட காணொளியில், “மகா கும்பமேளாவை ஒட்டி ஸ்டார்ட்அப் தொழில் தொடங்குகிறேன். எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு புகைப்படம் அனுப்பினால் அதை பிரிண்ட் செய்து குளிப்பாட்டுவேன்.
ஆன்லைனில் பணம் செலுத்திய 24 மணி நேரத்திற்குள் உங்கள் புகைப்படம் நீராட்டப்படும். இது டிஜிட்டல் குளியல்” என்று கூறியுள்ளார். தீபக் கோயல் தனது வாட்ஸ்அப் எண் மற்றும் ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்கான விவரங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவர் திரிவேணி சங்கமத்தில் பக்தர்களின் புகைப்படங்களை குளிப்பாட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.