சபரிமலை: சபரிமலையில் ஜனவரி 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. டிசம்பர் 31-ஆம் தேதி தொடங்கிய நெய்யபிஷேகம் இன்று, ஜனவரி 18-ம் தேதி காலை 10:30 மணிக்கு நிறைவடைந்தது. இதில் தொடர்ந்து களபாபிஷேகம் நடைபெறுகிறது.
நாளை இரவு 10:00 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கப்படும். மேலும், நாளை மாலை 6:00 மணி வரை மட்டுமே பம்பையில் இருந்து பக்தர்களை சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படும்.

ஜனவரி 20-ஆம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பிறகு கணபதி ஹோமம் நடைபெறும். அதன் பின்னர் பந்தளம் மன்னர் பிரதிநிதி ராஜராஜ வர்மா ஐயப்பனை தரிசனம் செய்வார். மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி மன்னர் பிரதிநிதியின் முன்னிலையில் ஐயப்பனை யோக நிலையில் அமர்த்தி, நடை அடைத்து 18 படிகளுக்கு கீழே இறங்குவார்.
அங்கு கோயிலுக்கான சாவி மற்றும் வருமானம் போன்றவை மன்னர் பிரதிநிதியிடம் கையளிக்கப்படுகின்றன. மேல் சாந்தி அவற்றை கோயில் நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைத்து, பூஜைகள் தவறாமல் நடைபெற வேண்டும் என்ற உறுதிமொழியுடன் திருவாபரணங்களுடன் புறப்படுவார்.