சண்டிகர்: விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி, விவசாயிகள் கடந்த ஆண்டு இரண்டாம் கட்ட போராட்டத்தை தொடங்கினர். விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காண விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் எல்லையில் போடப்பட்டிருந்த விவசாயிகளின் கூடாரங்களை போலீசார் அகற்றினர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால் நேற்றுமுன்தினம் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

இந்நிலையில், “குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும். வரும் 4-ம் தேதி மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் விவசாயிகள் சங்க தலைவர்கள் பங்கேற்பர். இதில் எங்களது கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்படும்” என்றார்.