டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பொதுப் பணத்தை வீணடித்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நேற்று டெல்லியில் கூடுதல் பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் நேஹா மித்தல் முன் விசாரணைக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியதாவது:- 2019-ம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தபோது, பொதுப் பணத்தை வீணடித்து டெல்லி முழுவதும் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டன. இதையடுத்து, இதற்கு காரணமானவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங் மற்றும் பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து வழக்கை ஏப்ரல் 18-ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் நேஹா மித்தல் ஒத்திவைத்தார்.