புது டெல்லி: ஆபரேஷன் சிந்து நடவடிக்கையைத் தொடர்ந்து, புதிய ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை வாங்க ராணுவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, துணை பட்ஜெட் மூலம் கூடுதலாக ரூ.50,000 கோடி ஒதுக்க திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆயுதப்படைகளின் தேவைகள், அத்தியாவசிய கொள்முதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகளைப் பூர்த்தி செய்ய இந்த கூடுதல் ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 9.53% அதிகம். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு பட்ஜெட் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

2014-15-ம் ஆண்டில், பாதுகாப்பு பட்ஜெட் ரூ.2.29 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது, இந்த ஆண்டு, ரூ. 6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது மொத்த பட்ஜெட்டில் 13.45% ஆகும். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழித்த இந்தியாவின் ஆபரேஷன் சிந்து, இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களில் ஒரு வியத்தகு பாய்ச்சலை உலகிற்குக் காட்டியது.
ஆபரேஷன் சிந்து வெற்றிக்குப் பிறகு மே 12 அன்று தனது உரையில், பிரதமர் நரேந்திர மோடி, “இந்த நடவடிக்கையின் போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் நம்பகத்தன்மை உறுதியாக நிரூபிக்கப்பட்டது. 21-ம் நூற்றாண்டின் போரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான நேரம் வந்துவிட்டது என்பதை உலகம் இப்போது அங்கீகரிக்கிறது” என்று கூறினார்.