திருவனந்தபுரம்: தொடர் மழை காரணமாக வயநாடு, இடுக்கி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா முழுவதும் ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, அனைத்து ஆறுகளும் நிரம்பி வழிகின்றன.
அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பல அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, வயநாடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வயநாடு, இடுக்கி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, முழு மலைப்பகுதிகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப் படையினர் எச்சரிக்கையாக உள்ளனர். இரவில் மலைப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படவில்லை.
கொல்லம், திருச்சூர், மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்பு இருப்பதால், கடலோரப் பகுதிகளும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன. இதற்கிடையில், மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 9 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு கேரளாவில் தொடர் மழை காரணமாக, 9 ஆறுகளில் ஆபத்து அளவைத் தாண்டி தண்ணீர் பாய்கிறது.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் அச்சன்கோவில் ஆறு, திருவனந்தபுரம் மாவட்டத்தில் வாமனபுரம் ஆறு, வயநாடு மாவட்டத்தில் கபினி ஆறு உள்ளிட்ட 9 ஆறுகளில் வெள்ள அளவு அபாய அளவைத் தாண்டி பாய்கிறது. எனவே, இந்த ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.