பெங்களூரு: கடந்த 24 மணி நேரமாக பெய்த கனமழையால் பெங்களூரு மாநகரத்தில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை பெய்த மழையால் பெருக்கெடுத்த வெள்ளநீர் சாக்கடை கழிவுநீருடன் கலந்து, நகரின் பல குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிறைந்துள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று அதிக மழை பதிவானது. தலைநகர் பெங்களூருவில் இயல்பு வாழ்க்கையே தடைப்பட்டிருக்கிறது. வெள்ளநீரில் சாக்கடை கழிவுகள் கலந்து வீதிகளில் பெருகி ஓடியதால், மக்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பைக்குகள், கார்கள் செல்ல முடியாமல் போனது.
நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு சார்பில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் படகுகள் இயக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வீதிகளில் பெருகி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்ததால் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மக்கள் கடும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், துணை முதல்வர் சிவக்குமார் வெளியிட்ட அறிவிப்பில், தொடர்ந்து பெய்யும் மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலையுடன் கண்காணித்து வருவதாகவும், 24 மணி நேரமும் அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பக்கம், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, நகரத்தில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாததையே இந்த திடீர் வெள்ள நிலைக்கு காரணமாக குறிப்பிடுகிறார். அவர் வெளியிட்ட அறிக்கையில், நீண்ட காலமாக நகர திட்டமிடலில் குறைபாடுகள் நிலவுவதால் இன்று மக்கள் இப்படி தவிக்கின்றனர் என்றும், இனிமேலும் இந்த நிலையை தொடர விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீரை உறிஞ்சும் வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், நவீன வடிகால் அமைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதையும் அவர் வலியுறுத்தினார்.
வெயிலுக்குப் பிறகு ஏற்பட்ட இந்த கனமழை, நகரின் இயல்பு நிலையை முற்றிலும் பாதித்துள்ளது. மழைபதிவின்படி, கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூருவில் மட்டும் 105.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சாம்ராஜ் நகரில் 88 மி.மீ., கனகபுரா மற்றும் எச்.ஏ.எல். பகுதியில் 78 மி.மீ., நாராயணபுராவில் 65 மி.மீ., மைசூருவில் 35 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நிலவரத்தின் அடிப்படையில், நகரத்தில் நிலவும் வெள்ள நிலை இன்னும் சில நாள்களுக்கு தொடரக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.