பாட்னா: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, பீகாரில் 12,000-க்கும் மேற்பட்ட புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. பீகார் மாநில தேர்தல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மாநிலத்தில் மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 77,895 இலிருந்து 90,712 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 12,817 புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அமைக்கப்படவுள்ள 12, 817 புதிய வாக்குச் சாவடிகளில், 12,479 வாக்குச் சாவடிகள் அவை ஏற்கனவே அமைந்துள்ள அதே கட்டிடம் அல்லது வளாகத்தில் அமைக்கப்பட உள்ளன. மீதமுள்ள 338 வாக்குச் சாவடிகள் தனித்தனியாக அமைக்கப்படும்.

புதிதாக உருவாக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் மாவட்ட வாரியான பட்டியல் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு வாக்குச்சாவடியிலும் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இல்லை என்பதை உறுதிசெய்து, புதிய வாக்குச்சாவடிகளுக்கான தேவையை மதிப்பிடுமாறு தேர்தல் பதிவு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜூலை 25-ம் தேதியுடன், பீகாரில் 95.92% வாக்காளர்கள் இதுவரை சிறப்புத் திருத்தத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகாரில் பதிவுசெய்யப்பட்ட 7.9 கோடி வாக்காளர்களில், இறந்தவர்கள் உட்பட முகவரி தெரியாதவர்களின் எண்ணிக்கை 41.64 லட்சத்தை எட்டியுள்ளது.