கொல்கத்தா: ஈதுல் ஸுஹா தொழுகையை நடத்த அனுமதி வழங்காமல் இந்திய இராணுவம் எதிர்மறை முடிவெடுத்தது என்பது ஒருவிதத்தில் அபூர்வமான சம்பவமாகும். கொல்கத்தாவில் உள்ள ராணுவத்தின் கிழக்கு மண்டல தலைமையகம் ‘போர்ட் வில்லியம்’ முன்பாக உள்ள வரலாற்று சிறப்புமிக்க ரெட்ரோட்டில் இந்த தொழுகை நடைபெற உள்ளதற்கான அனுமதி “ராணுவ தேவைக்காக” மறுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த முடிவை இராணுவம் கொல்கத்தா போலீசுக்கும், தொழுகையை ஒழுங்கமைக்கும் கொல்கத்தா கிலாஃபத் கமிட்டிக்கும் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் தொழுகை நடைபெறுவது வழக்கம். கடந்த வருடங்களில் மேற்குவங்க முதல்வர் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் இதில் பங்கேற்று உரையாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டும் வழக்கம்போல், மே 10 அன்று, கொல்கத்தா கிலாஃபத் கமிட்டி ரெட்ரோடில் உள்ள நேதாஜி சிலை முதல் போர்ட் வில்லியம் கிழக்கு நுழைவாயில் வரை தொழுகையை நடத்த இராணுவத்திடம் அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தது. இந்தக் கடிதத்திற்கு பதிலளித்து, இராணுவத்தின் பங்கேங்கால் சப் ஏரியாவின் நிலத்தினை பொறுப்பாக கொண்ட ஒரு கர்னல் ரேங்க் அதிகாரி, “ஜூன் 7 அல்லது 8 ஆம் தேதி 2025 அன்று ரெட்ரோடில் ‘ஈதுஸ் ஸுஹா’ கூட்டுத் தொழுகை நடத்த அனுமதி வழங்க முடியாது, ஏனெனில் அந்த பகுதி ராணுவ தேவைக்காக தேவைப்படுகிறது” என்று சனிக்கிழமை பதில் கடிதம் அனுப்பினார்.
இந்த அனுமதி மறுப்பை உறுதிப்படுத்திய மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஜாவேத் அக்மத் கான், கிலாஃபத் கமிட்டியின் உறுப்பினராகவும் இருக்கிறார். அவர், “நாங்கள் அந்தக் கடிதத்தை பெற்றுள்ளோம். இந்த பிற்பகலில் ஜகாரியா வீதியில் உள்ள எங்கள் அலுவலகத்தில் முக்கியக் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.