புதுடில்லி: பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சு. ஜெயசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். உலகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு தொடர்ந்து, பயங்கரவாதிகளை ஒடுக்கத் தவறிய பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளையும் இந்தியா முற்றிலும் நிறுத்தி விட்டது. மேலும், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இத்தாலி பிரதமர் மெலோனி மற்றும் ஜப்பான், யு.ஏ.இ., ஈரான், இலங்கை, ஆஸ்திரேலியா, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி, பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, ஜெயசங்கர் லாமியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அவர், “பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதன் பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமியுடன் தொலைபேசியில் பேசினேன். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம். பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறினேன்” என்று கூறியுள்ளார்.