தெலுங்கானா மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியாக இருந்த பாரத ராஷ்டிர சமிதி (BRS) கடைசி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்றார். எதிர்க்கட்சியாக BRS செயல்பட்டு வருவதாக இருந்தாலும், அந்தக் கட்சிக்குள் தற்போது பல்வேறு குழப்பங்கள் உருவாகியுள்ளன.

BRS தலைவர் சந்திரசேகர் ராவ் வயோதிகம் காரணமாக தீவிர அரசியலில் இருந்து பின்னுக்கொண்டதால், அவரது வாரிசுத் தலைமையின் மீது கட்சியினுள் போட்டி தீவிரமாகியுள்ளது. மகன் ராம ராவும், மகள் கவிதாவும் அந்தப் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இந்த நிலைமையில், கவிதா கட்சியின் தற்போதைய நிலைமையை விமர்சித்து, கட்சியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
கவிதா எழுதிய ரகசிய கடிதங்கள் சமீபத்தில் வெளியே கசிய, அதற்கும் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த கடிதங்களை சிலர் வேண்டுமென்றே வெளியிட்டதாகக் கூறி கவிதா கடும் விமர்சனம் மேற்கொண்டுள்ளார். மேலும், கட்சியை பாஜகவுடன் இணைக்க முயற்சி நடக்கிறது என பரபரப்பான குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.
அந்த முயற்சியை தன் மீது அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும், இத்தகைய சதிக்கு அவர் ஒருபோதும் இடமளிக்க மாட்டார் என்றும் கவிதா தெரிவித்துள்ளார். சிறையில் இருந்தபோதும் பாஜகவுடன் இணைவதற்கான ஆஃபர் வந்ததாகவும், அதனை நிராகரித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
சந்திரபாபு நாயுடு வழியாகவும் பாஜக இணைப்பு முயற்சி வந்ததாக அவர் தெரிவித்தார். BRS கட்சி பாஜகவுடன் இணைந்தால் தொண்டர்களுக்கு துரோகம் செய்ததாக ஆகும் எனவும் அவர் வலியுறுத்தினார். கட்சியை காப்பாற்றும் முயற்சியில், எத்தகைய சிரமத்தையும் எதிர்கொள்ளத் தயார் எனவும் கவிதா தெளிவாக கூறினார்.
தன்னை கட்சியிலிருந்து பிரிக்க சிலர் சதி செய்கின்றனர் என்றும், சமூக வலைதளங்களில் நடிகர்கள், பிரபலங்கள் பணம் வாங்கி இழிவாக பேசுகின்றனர் என்றும் கவிதா குற்றம்சாட்டியுள்ளார். கட்சி தலைமையிடம் இருந்து சரியான ஆதரவு இல்லை என்ற வேதனையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து, “புதிய கட்சி தொடங்கும் யோசனை இருக்கிறதா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது என பதிலளித்தார். இதன் மூலம் கவிதா, புதிய கட்சி தொடங்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
சந்திரசேகர் ராவை பாதுகாக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையுடன், BRS கட்சியின் தலைமை மற்றும் அதன் எதிர்காலம் மீதான குழப்பம் தெலுங்கானா அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.