மும்பை: கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மோசடி நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக, வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது ஏன், வாக்கு சதவீதம் திடீரென அதிகரித்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது இதற்கான விளக்கத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. இந்த சூழலில், மகாராஷ்டிராவைப் போலவே, அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள பீகார் தேர்தலிலும் மோசடி நடக்கும் என்று ராகுல் சில நாட்களுக்கு முன்பு விமர்சித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை நேற்று முன்தினம் மீண்டும் தேர்தல் ஆணையம் மறுத்திருந்தது. இதைப் பற்றி மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நேற்று கூறியதாவது:- மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்து ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்க மறுப்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும். பீகார் சட்டமன்றத் தேர்தலில் வரவிருக்கும் தோல்விக்கான காரணங்களை அவர் ஏற்கனவே கூறத் தயாராகி வருகிறார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சியை மேலும் படுகுழியில் தள்ளும். ராகுலைச் சந்திக்க நேரம் கேட்டால், ஒரு நாளில் அவருக்கு அது கிடைக்காது என்று கட்சி எம்.எல்.ஏ.க்களே கூறுகிறார்கள். இது குறித்து அவர் சுயபரிசோதனை செய்ய வேண்டும். ஜனநாயக செயல்முறைகள் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்கள் குறித்து ராகுல் தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகிறார்.
இதன் மூலம், நாம் நாட்டை எந்த திசையில் கொண்டு செல்கிறோம், எந்த வகையான விஷத்தைப் பரப்புகிறோம் என்பது குறித்து அவர் சிந்திக்க வேண்டும். மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தோல்வி ராகுல் காந்தியையும் அவரது கூட்டாளிகளையும் காயப்படுத்தியுள்ளது. விவசாயிகள் மற்றும் மகாராஷ்டிராவின் பொதுமக்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் வழங்கிய தேர்தல் தீர்ப்பை ராகுல் தொடர்ந்து அவமதித்தால், மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள்.