கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், அக்கட்சி தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:- தேர்தல் நெருங்கும் போதெல்லாம், பா.ஜ.க., ஊடுருவல் குறித்து பேசுகிறது. ஆனால் நமது குடிமக்கள் அமெரிக்காவிலிருந்து சங்கிலியால் நாடு கடத்தப்படுகிறார்கள். இது நாட்டுக்கே வெட்கப்பட வேண்டிய விஷயம். நம் நாட்டு மக்கள் கண்ணியத்துடன் திரும்புவதை மத்திய அரசு உறுதி செய்திருக்க வேண்டும்.
அமெரிக்காவில் இருந்து தனது குடிமக்களை அழைத்து வர கொலம்பியா விமானத்தை அனுப்புகிறது. மத்திய அரசு ஏன் விமானம் அனுப்பவில்லை? தேர்தல் ஆணையத்தின் ஆசியுடன் வாக்காளர் பட்டியலை பாஜக எவ்வாறு கையாள்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜக வெற்றி பெற்றது. சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடந்தால் மேற்கு வங்கத்தில் வெற்றி பெற முடியாது என்பது பாஜகவுக்குத் தெரியும்.
எனவே, ஹரியானா மற்றும் குஜராத்தில் இருந்து போலி வாக்காளர்களை கொண்டு வந்து மேற்கு வங்கத்தில் வெற்றி பெற அக்கட்சி முயற்சி செய்யும். 2006-ல் நிலம் கையகப்படுத்தும் போராட்டத்தின் போது 26 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிந்தது. அதேபோல் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக இயக்கம் தொடங்கலாம். தேவைப்பட்டால், வாக்காளர் பட்டியலைத் திருத்தக் கோரியும், போலி வாக்காளர்களை நீக்கக் கோரியும் தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு காலவரையற்ற தர்ணாவில் ஈடுபடுவோம். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.