டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசு அமைத்த கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது. தேசிய அணை பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. குமுளியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக, கேரள அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் அணை பராமரிப்பு பணிகள் தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். இக்குழுவும் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும். முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு அனுமதிக்கவில்லை.
இடையூறாக உள்ள மரங்களை வெட்டி சாலைகள் அமைக்க கேரளா அனுமதிப்பதில்லை, எனவே பராமரிப்பு பணிகளை தமிழக அதிகாரிகளை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி கடந்த மாதம் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், புதிதாக அமைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு கண்காணிப்பு குழுவை உடனடியாக கூட்டி சுமுக தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.
4 வாரங்களுக்குள் தீர்வு காண முடியாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள குமுளியில், முல்லை பெரியாறு கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம், அதன் தலைவர் அனில் ஜெயின் தலைமையில், வரும் 22-ம் தேதி நடக்கிறது.