புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து பேசினார். பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. இதன் பின்னணியில் எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன.பூஞ்ச், பாரமுல்லா, குப்வாரா, ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே உள்ள பள்ளிகளும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன.

காஷ்மீர் பல்கலையில் நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த அஜித் தோவால், பாதுகாப்பு நிலைமை, எல்லையில் நிலவும் சூழ்நிலை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியா, எதிரிகளுக்கு உறுதிப் பதில் அளிக்கும் வகையில் தன்னிறைவு மற்றும் தைரியத்துடன் செயல்படுகிறது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம், இந்திய ராணுவத்தின் செயல்திறன் மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாதுகாப்பு அமைப்புகள் முழுமையாக செயல்படுகின்றன. பதற்றம் நிலவும் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் கண்காணிப்பு அதிகரித்து உள்ளது.இந்த சந்திப்பின் மூலமாக, எதிர்கால நடவடிக்கைகள் தெளிவாக திட்டமிடப்படுவதற்கு மையம் அமைந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் அஜித் தோவால் நடத்திய ஆலோசனை தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் நடந்துள்ளது.