ஹைதராபாத்: உஸ்மானியா பல்கலைப்பழகத்தில் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்தது. இதனால், மாணவர்கள் ஆத்திரமடைந்து, சாப்பாட்டு தட்டுகள் மற்றும் குழம்பு பாத்திரங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைதராபாத்தில் செயல்படும் உஸ்மானியா பல்கலைக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். பல மாணவர்கள் விடுதியில் தங்கி உள்ள நிலையில், அங்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்பும் எழுந்து இருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த மார்ச் 11-ம் தேதி இரவில், விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக, கோபமடைந்த மாணவர்கள், பல்கலைகழகத்திற்குச் செல்லும் வழியை மறித்து, சாப்பாட்டு தட்டுகள் மற்றும் பாத்திரங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள், “விடுதியில் வழங்கப்படும் உணவில் புழு மற்றும் அருவருக்கத்தக்க பொருட்கள் தொடர்ந்து தென்பட்டு வருவதாகவும், சுகாதாரமான உணவு வழங்குமாறு பல முறை கோரிக்கை விடுத்தும், பல்கலை நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக” குற்றம்சாட்டினர்.
அவர்கள், “பல்கலை நிர்வாகம் மாணவர்களின் உயிருடன் விளையாடுவதாகவும், துணை வேந்தரை சந்தித்து இது தொடர்பாக முறையிட வேண்டும்” என்றும் கூறினர். தொடர்ந்து, “தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்காததால், போராட்டம் தொடரும்” என்று எச்சரிக்கை விடுத்தனர்.