லக்னோ: தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். பின்னர் அனைவருக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று காலை டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி., டிம்பிள் யாதவ் உள்பட 151 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனை அறிந்த விமானி, லக்னோ விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் விமானம் மீண்டும் பத்திரமாக லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஓடுபாதையிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டனர்.
பயணிகள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இதனால் பயணிகள் தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்தது.