மத்திய அரசு, PF கணக்கில் இருந்து UPI மற்றும் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி மே மாத இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான புதிய தொழில்நுட்பம் EPFO 3.0 என்ற பெயரில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த மாற்றம், தொழிலாளர்களுக்கு PF கணக்கை எளிதாக கையாளும் வகையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுமிதா தவ்ரா, இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வங்கி சேவைக்கு இணையாக மிகப்பெரிய மாற்றத்துடன் PF அமைப்பு செயல்படும் என விளக்கம் அளித்தார். EPFO 3.0 பயன்படுத்தி, தானியங்கி முறையில் PF கணக்கில் உள்ள இருப்பை UPI செயலிகள் மூலம் எளிதாக தெரிந்துகொள்ள முடியும். மேலும், புதிய முறையில், ஒரே நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை பணத்தை சில நிமிடங்களில் அல்லது சில மணி நேரங்களில் எடுக்க முடியும் என அவர் கூறினார்.
இந்த புதிய நடைமுறை, PF கணக்கில் இருப்பு பார்க்கும் வழியில் மாற்றத்தை ஏற்படுத்தும், மற்றும் தேவையான வங்கிக் கணக்கிற்கும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். அதனை, பிரத்யேக அட்டையை பயன்படுத்தி ஏடிஎம் மூலம் எடுக்கவும் முடியும்.
இந்த வசதி மே மாத இறுதி அல்லது ஜூன் மாதம் வரை நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது என சுமிதா தவ்ரா கூறியுள்ளார்.