நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு, பார்லிமென்ட் வளாகத்தில், பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறியதாவது:- பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு, லட்சுமி தேவி அருள்பாலிக்க வேண்டும் என மனதார பிரார்த்திக்கிறேன். மூன்றாவது முறையாக நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் எனக்கு வாய்ப்பளித்துள்ளனர்.
மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளோம். இந்த பட்ஜெட் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட் புதிய நம்பிக்கையையும், புதிய பலத்தையும் தரும். வரும் 2047-ல் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.
அப்போது நிச்சயம் வளர்ந்த இந்தியா உருவாகும். இந்த லட்சிய கனவை நிறைவேற்ற, 140 கோடி மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாடு முழுவதும் சமச்சீர் வளர்ச்சி அடைய தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. பெண்களுக்கு சம உரிமையை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. நடப்பு பட்ஜெட் தொடரில் இது தொடர்பாக மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். சீர்திருத்தம், செயல், மாற்றம் என்ற கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது.
இதன் மூலம் நமது நாடு அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். நமது நாடு இளைஞர்களால் நிறைந்துள்ளது. 20 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முழுப் பங்களிப்பை வழங்க வேண்டும். அவர்கள் 45-50 வயதை எட்டும்போது, வளர்ந்த இந்தியாவின் பலன்களை அனுபவிக்க முடியும். 1930 மற்றும் 1942-ம் ஆண்டுகளில் நாட்டின் சுதந்திரப் போராட்டம் உச்சத்தை எட்டியது.
அப்போது ஏராளமான இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களின் தியாகத்தால் சுதந்திரக் காற்றை சுவாசித்தோம். இப்போது அதே உற்சாகத்துடன் வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் உழைக்க வேண்டும். இது எங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது. 2014-ல் நான் பிரதமராக பதவியேற்றேன். அதிலிருந்து, பார்லிமென்ட் கூடுவதற்கு சில நாட்களுக்கு முன், வெளிநாட்டில் இருந்து ஒருவித சுடர் வீசப்படுகிறது. அந்தச் சுடரைப் பெரிய நெருப்பாக மாற்ற சிலர் கடுமையாக முயற்சிப்பார்கள். இந்த கேலிக்கூத்து கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்முறையாக வெளிநாட்டில் இருந்து எந்த பிரச்னையும் எழுப்பப்படவில்லை. இது ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.