தலேவால்: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் அப்புறப்படுத்தினர். சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்ற) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால் மற்றும் சர்வாண் சிங் பாண்டே உள்ளிட்டோரை பஞ்சாப் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
மேலும், எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை அப்புறப்படுத்தி, தற்காலிக கூடாரங்களை அகற்றினர். போராட்டத்தில் ஈடுபட்டு வீடு திரும்ப விரும்பிய விவசாயிகள் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள கன்னவுரியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போக்குவரத்துக்கு சிரமம் இல்லாமல் சாலையை சீரமைக்கும் பணியில் போலீஸார் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் – ஹரியானா எல்லையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பலமுறை டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றுள்ளனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விடுவிக்கப்பட்டனர். இதனிடையே விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இது போராட்ட களத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விவசாயிகளுடன் மத்திய அரசு குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், பிரகலாத் ஜோஷி, பியூஷ் யோயல் ஆகியோர் சண்டிகரில் விவசாயிகளுடன் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது 7-வது சுற்று பேச்சுவார்த்தையாகும். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மே மாதம் நடைபெறும். இதனிடையே மத்திய அரசு குழுவினரை சந்தித்து ஆம்புலன்சில் திரும்பிய தலேவால் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தகவல் போராட்ட களத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக, பஞ்சாப்-ஹரியானா-ஷாம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும் போலீஸார் கைது செய்தனர்.
ஓராண்டாக சாலை மூடப்பட்டுள்ளது. பஞ்சாப்-ஹரியானா-கன்னவுரி எல்லையில் தற்காலிக கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்நிலையில், பஞ்சாப் அரசின் உத்தரவின் பேரில், அந்த பகுதியில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு செல்லாமல் இருக்க போடப்பட்டிருந்த கான்க்ரீட் தடுப்புகளையும் போலீசார் அகற்றினர். ஓராண்டாக மூடப்பட்ட சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது. மேலும், விவசாயிகள் மீண்டும் திரண்டு போராட்டம் நடத்தாமல் இருக்க பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது என்று கூறியுள்ள ஒலிம்பிக் வீரர் பஜ்ரங் புனியா, விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புனியா, “பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்த விவசாயிகள் சங்க தலைவர்களை கைது செய்தனர். போராட்ட களத்தில் இருந்த விவசாயிகளையும் கைது செய்தனர். கூடாரங்களை அகற்றினர். மத்திய அரசும், பஞ்சாப் அரசும் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளன. இந்நிலையில் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.