டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நவம்பர் 11, 2024 அன்று பதவியேற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. பிரியாவிடை விழாவில் பேசிய சஞ்சீவ் கன்னா, ‘ஓய்வுக்குப் பிறகு வேறு எந்த பதவியையும் நான் ஏற்க மாட்டேன். சட்டப் பணிகளில் ஈடுபடுவேன்’ என்றார். சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஏப்ரல் 29 அன்று ஜனாதிபதி முர்முவால் இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் நியமிக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில், இன்று புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றார். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீதிபதிகள் விழாவில் பங்கேற்றனர்.
தற்போது பதவியேற்றுள்ள பி.ஆர். கவாய் இந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர். கவாய் ஒரு புத்த மதத்தைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு (2007-2010) பிறகு இந்திய தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் இரண்டாவது தலித் நீதிபதி இவர் ஆவார்.