உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ் சங்கமம் நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கலாச்சார மையங்களாக இருந்த வாரணாசிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான பிணைப்பைப் புதுப்பிக்க 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி தற்போது மூன்றாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 15 முதல் 24 வரை நடைபெறும்.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
இந்த முறை, சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் இலக்கியம் மற்றும் தேசத்தின் கலாச்சார ஒற்றுமைக்கு அகஸ்தியரின் பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் காசி தமிழ் சங்கமம் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐஐடி மெட்ராஸ் மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: “உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ் சங்கமம் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. மகா கும்பமேளாவின் மத்தியில் தமிழ் சங்கமம் நடைபெறுவது முக்கியம்.” “காவிரி மற்றும் கங்கை நதி, தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான இணைப்பு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ளது. காசிக்கு வரும் தமிழக மக்கள் மறக்க முடியாத நினைவுகளுடன் திரும்பி வரட்டும்” என்றும் பிரதமர் கூறினார்.