ஆந்திரா: 7 ஆண்டுகளாக தனது தனித்திறமையால் மாணவர்களின் உயர்வுக்கு காரணமாக இருந்த ஆசிரியை பதவி உயர்வில் சென்ற போது பிரிய மனமின்றி ஆசிரியையை கட்டிப்பிடித்து கதறி அழுத பள்ளி குழந்தைகள் குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஆந்திர மாநிலம் ஆத்மகூர் பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் வனஜா என்பவர் 7 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றினார். அவர் தனது சொந்த திறமை மற்றும் தனிப்பட்ட பாணியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.
இது அந்த பள்ளியில் உள்ள குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் அங்குள்ள பெற்றோர்களும் ஆசிரியைக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஆசிரியர் வனஜா பதவி உயர்வு பெற்று வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று அவர் பள்ளியில் இருந்து விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி குழந்தைகள் வனஜாவை சூழ்ந்தபடி மேடம் போகாதீர்கள் என கூறியபடி கதறி அழுதனர். சில பள்ளி குழந்தைகள் அவரை கட்டி அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தனர்.
ஆசிரியை வனஜாவுக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவர் பள்ளி குழந்தைகளை சமாதானம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார். இந்த காட்சிகள் ஆந்திர மாநிலத்தில் சமூக வலைதளங்களில் பரவியது.