புது டெல்லி: போபால் நவாப் குடும்ப சொத்து தகராறு வழக்கை கீழ் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு மாற்றும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபாலின் கடைசி நவாப் ஹமீதுல்லா கான் 1960-ம் ஆண்டு இறந்த பிறகு, அவரது மகள் சஜிதா சுல்தானா 1962-ம் ஆண்டு வாரிசாக அங்கீகரிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து, நவாப்பின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் 1999-ம் ஆண்டு இஸ்லாமிய தனியார் சட்டத்தின் கீழ் சொத்தைப் பிரித்துக் கொடுக்கக் கோரி ஒரு சிவில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், 2000-ம் ஆண்டு சஜிதா சுல்தான் மற்றும் அவரது வாரிசுகளான மன்சூர் அலி கான், நடிகை ஷர்மிளா தாகூர், நடிகர்கள் சைஃப் அலி கான், சோஹா அலி கான் மற்றும் சபா சுல்தான் ஆகியோருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

ஜூன் 30 அன்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்தது. மேலும், வழக்கை மூடுவதற்குப் பதிலாக புதிய விசாரணைக்காக கீழ் நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பியது. நவாப்பின் மூத்த சகோதரரின் சந்ததியினரான உமர் ஃபரூக் அலி மற்றும் ரஷீத் அலி ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மனுவை விசாரித்த அமர்வு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதுடன், சைஃப் அலி கான் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.