திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலின் முன் 2 துவாரகை சிலைகள் உள்ளன. சபரிமலை கோயில் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டபோது, இந்த துவாரகை சிலைகளுக்கும் தங்க முலாம் பூசப்பட்டது. சபரிமலையில் உள்ள அனைத்து முக்கிய பணிகளுக்கும் உயர் நீதிமன்றத்தின் முன் அனுமதி தேவை. இந்த சூழ்நிலையில், துவாரகை சிலையின் தங்க முலாம் பூசப்பட்ட பொருட்கள் சென்னைக்கு அனுமதியின்றி பழுதுபார்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சபரிமலை சிறப்பு ஆணையர் கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், திருவிதாங்கூர் தேவசம்போர்டு, உயர் நீதிமன்றத்தின் எந்த அனுமதியும் பெறாமல், துவாரகை சிலையில் உள்ள தங்கத் தகடுகளை பழுதுபார்ப்பதற்காக சென்னைக்கு எடுத்துச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், திருவிதாங்கூர் தேவசம்போர்டு இதை மறுத்துள்ளது. இது குறித்து, தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:- துவாரகை சிலையில் உள்ள தங்கத் தகடுகளில் சேதங்கள் இருப்பதால் அவற்றை சரிசெய்ய வேண்டும் என்று தந்திரி கூறினார்.
அதனால்தான், பழுதுபார்ப்பதற்காக தந்திரியின் அனுமதியுடன் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தங்கத் தகடுகளை நன்கொடையாக வழங்கிய நபரின் பிரதிநிதியும், தேவசம்போர்டு அதிகாரிகளும் அவருடன் சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.