தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்கிறார். இந்திய தேர்தல் ஆணையம் 1950-ல் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் தலைமை தேர்தல் கமிஷனரை மத்திய அரசு நியமித்தது. 1989-ல், தலைமை தேர்தல் கமிஷனருடன் கூடுதலாக இரண்டு தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர். 1990-ல் அப்போதைய வி.பி. சிங் அரசு சட்டத்தில் திருத்தம் செய்து இரண்டு தேர்தல் ஆணையர்களின் நியமனத்தை ரத்து செய்தது. 1993-ல், நரசிம்மராவ் அரசு, சட்டத்தில் திருத்தம் கொண்டு, மீண்டும் இரண்டு தேர்தல் கமிஷனர்களை நியமிக்க வழிவகை செய்தது.
மார்ச் 2, 2023 அன்று, உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில், “பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. இதையடுத்து, 2023 டிசம்பரில், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் புதிய சட்டம், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை, பிரதமர், மூத்த மத்திய அமைச்சர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழு நியமிக்கும் என அறிவிக்கப்பட்டது. புதிய சட்டத்தின்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தேர்வுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டு, மூத்த மத்திய அமைச்சர்கள் குழுவில் சேர்க்கப்பட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தற்போது, தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமார், தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் உள்ளனர்.
இதில், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையரையும், புதிய தேர்தல் ஆணையரையும் நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு டெல்லியில் நேற்று முன்தினம் இரவு கூடியது. கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். தேர்வுக் குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பின் முடிவு எடுக்கலாம் என கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட அரசு உத்தரவில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்கிறார்.