அமராவதி: ஆந்திராவின் அமராவதியில் உள்ள செயலகத்தில் நேற்று அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. பின்னர், அமைச்சர் எம். ராம் பிரசாத் ரெட்டி கூறியதாவது:-
தேர்தலின் போது அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான சுதந்திர தினமான 15-ம் தேதி முதல் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்வர் சந்திரபாபு நாயுடு இதற்கு ‘ஸ்ரீ சக்தி’ என்று பெயரிட்டுள்ளார். இந்த ஸ்ரீ சக்தி திட்டத்திற்காக 6,700 அரசு பேருந்துகள் பயன்படுத்தப்படும். நமது மாநிலத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த, இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்ற ஒரு குழு ஜனவரி மாதம் ஆய்வு நடத்தியது.

‘பூஜ்ஜிய டிக்கெட்’ திட்டத்தின் கீழ், ஆந்திராவில் உள்ள அரசு பேருந்துகளில், கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள் மற்றும் நகரங்கள் வரை, பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம். பல்லா வேலுகு, அல்ட்ரா பல்லா வேலுகு, எக்ஸ்பிரஸ், அல்ட்ரா எக்ஸ்பிரஸ் போன்ற அனைத்து பேருந்துகளிலும், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஏதேனும் அடையாளச் சான்றினைக் காட்டி, மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம்.
இந்தத் திட்டத்திற்காக அரசாங்கம் ரூ.1,950 கோடியை செலவிடுகிறது. 3,000 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்படும். இதைத் தொடர்ந்து, கூடுதலாக 1,400 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும். இதை முதலமைச்சர் எம்.ராம்பிரசாத் ரெட்டி அறிவித்தார்.