காஷ்மீர்: சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடல்… பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரின் பல்வேறு விடுதி உரிமையாளர்களும், ஜம்மு – காஷ்மீர் விடுதி அமைப்பினரும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை காஷ்மீருக்கு வருகைதரும் சாத்தியமான பயணிகளின் எண்ணிக்கையை குறைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜம்மு – காஷ்மீர் விடுதி கூட்டமைப்பின் தலைவர் முஷ்டாக் சையா பேசியதாவது, ”காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்களை மூடும் அரசின் அறிவிப்பு துரதிருஷ்டவசமானது. ஒரே நேரத்தில் 48 சுற்றுலாத் தலங்களை மூடுவது, தவறான செய்தியை வெளியே பரப்பும். ஜம்மு – காஷ்மீருக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு இது மிகப்பெரிய தயக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறையும்.
இது காஷ்மீர் சுற்றுலா வணிகத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு” எனக் குறிப்பிட்டார். ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்துக்குட்பட்ட பஹல்காம் பகுதியில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22ஆம் தேதி கொடூரமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. அதோடு மட்டுமின்றி பாகிஸ்தான் உடனான பல்வேறு தொடர்புகளையும் துண்டித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீர் பள்ளத்தாக்கில் தூஷ்பத்ரி, கோகா்நாக், டக்சம், அச்சாபல், பாங்குஸ் பள்ளத்தாக்கு, சிந்தன் மற்றும் மாா்கன் டாப் உள்ளிட்ட 48 சுற்றுலாத் தலங்களை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.