சண்டிகர்: பெண்ணின் சடலத்தை மூட்டையில் வைத்து கட்டி சாலையோரம் வீசி சென்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை அடுத்த ஆர்த்தி சவுக் பகுதியில் பைக்கில் வந்த இரண்டு பேர், மூட்டை ஒன்றை சாலையோரம் வீசி சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த பொதுமக்கள், மூட்டையில் என்ன உள்ளது? என கேட்டபோது.
அழுகிய மாம்பழங்கள் இருப்பதாக கூறிவிட்டு, பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றனர். தொடர்ந்து பொதுமக்கள் மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இளைஞர்களை தேடிவருகின்றனர்.