புதுடில்லி: கடந்த 5 ஆண்டுகளில் புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை என்ஜின் என்டிஏ அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக வேட்புமனு தாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கி 23ம் தேதி நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24ம் தேதி நடைபெற்றது. இதனிடையே சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 30 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி புதுச்சேரி வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை என்ஜின் என்டிஏ அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது. ஆகவே தான் புதுச்சேரி மக்கள் மீண்டும் என்டிஏ அரசை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
‘எனது வாக்குச்சாவடி வலிமையான வாக்குச்சாவடி – புதுச்சேரி’ நிகழ்ச்சியில், மார்ச் 30 மாலை 5:30 மணிக்கு பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.